71அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 68 புள்ளி 60 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாகவும், முல்லைபெரியார் அணையில் இருந்து கடந்த திங்கட்கிழமை மூவாயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டதாலும் தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியது. அதன் காரணமாக கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை விடப்பட்டது.
இந்நிலையில் அணையின் நீர் இருப்பு ஐந்தாயிரத்து 471 மில்லியன் கனஅடியாக இருந்த நிலையில் அணையின் நீர்வரத்து வினாடிக்கு ஆயிரத்து 961 கனஅடியாக அதிகரித்தது. இதனால் நள்ளிரவில் அணையின் நீர்மட்டம் 68 புள்ளி 60 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதற்கிடையே அணையில் இருந்து வினாடிக்கு இரண்டாயிரத்து 190 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வைகை ஆற்றின் கரையோரம் செல்லவும், குளிக்கவும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment