தெலங்கானா போலீசுக்கு குவியும் பாராட்டு.. டிரென்டாகும் ஹேஷ்டாக்குகள்..!
பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற நால்வரையும் என்கவுன்டர் செய்த தெலங்கானா போலீசாருக்கு பாராட்டு தெரிவித்து டுவிட்டரில் பலரும் பதிவிடுவதால், அதுகுறித்த ஹேஷ்டேக்குகள் இந்திய அளவிலும், உலகளவிலும் டிரென்டாகி வருகிறது.
தெலங்கானா மாநிலம் சம்சாபாத்தில், கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட இடத்திலிருந்து, 100 மீட்டர் தொலைவில், அந்த கொடூரங்களை அரங்கேற்றிய நான்கு பேரும் இன்று அதிகாலை என்கவுன்டர் செய்யப்பட்டனர்.
அனைத்துத் தரப்பினரும் மரண தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில், நால்வரையும் என்கவுன்டர் செய்த தெலங்கானா காவல்துறையை பாராட்டியும், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும், டுவிட்டர் ஏராளமானோர் பதிவிட்டு வருகின்றனர்.
தெலங்கானா காவல்துறையை பாராட்டும் டுவிட்டர் பதிவர்கள், சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனாரையும் வாழ்த்தி வருகின்றனர். இந்த வகையில், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஹைதராபாத் காவல்துறை சிறந்த பணியை மேற்கொண்டிருப்பதாகவும், போலீசாருக்கு தமது வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வெளியிட்டிருக்கும் டுவிட்டர் பதிவில், ஹைதராபாத் போலீசாரை பாராட்டுவதாகவும், காவலர்களை, காவலர்களாக செயல்பட அனுமதித்த, அத்துறையின் தலைமையை வாழ்த்துவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
தெலங்கானா போலீசாரை வாழ்த்தி பலரும் இடும் பதிவுகள் மூலம், என்கவுன்டர் குறித்த ஹேஷ்டாக்குகள், இந்திய அளவில், முதல் ஆறு இடங்களில் உள்ளது. உலகளவில், டுவிட்டரில் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment