இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு இணையதளம் மற்றும் இணைய சேவை மையங்களில் பதிவு செய்ய இன்று கடைசி நாளாகும். தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைகழகம் மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு முதல், அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் கலந்தாய்வை, முழுமையாக ஆன்லைனில் நடத்துகிறது.
இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு ஆன்லைனில் பதிவு செய்தல் மே 3ம் தேதி தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 30ம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 2ம் தேதி (இன்று) வரை நீட்டிக்கப்பட்டது. இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு நேற்று முன்தினம் மாலை வரை இணையதளம் மூலம் 1,28,425 பேரும், இணைய சேவை மையங்கள் மூலம் 12,091 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற உள்ளது. அதற்காக மாணவர்கள் தங்கள் மாவட்டத்தில் அமைந்துள்ள, இணைய சேவை மையத்தில் நேரில் சென்று அசல் சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர், கலந்தாய்வில் பங்கேற்க தகுதியுள்ள மாணவர்களின் ரேண்டம் எண் வெளியிடப்படும்.
மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் லிஸ்ட் வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து மாணவர்கள் தங்களின் விருப்பகல்லூரி பட்டியலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதைத்தொடர்ந்து ஜூலை 30ம் தேதிக்குள், 6 கட்டங்களாக இணையதளம் மூலம் இடம் ஒதுக்கீடு செய்யப்படும். கலந்தாய்வு தொடர்பான அறிவிப்புகள் அனைத்தும், இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கான பிரத்யேக இணையதளத்தில் (tnea.ac.in) வெளியிடப்படும்.
Comments
Post a Comment