ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை – புதிய அரசாணை ! முற்றுகைப் பேராட்டம் ஒத்திவைப்பு !!
கடும் விதிமுறை இல்லாமல் 40 சதவீத ஊனமுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டுமென்றும், 2016 ஆம் ஆண்டு தமிழக அரசின் சமூகநலத்துறை வெளியிட்ட அரசாணை எண்.27ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டுமென்றும் கோரி மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் மே-29 முதல் சென்னை எழிலகத்தில் தொடர் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி, இன்று(மே-28) காலை 11-00 மணிக்கு சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் கட்டிட வளாகத்தில் உள்ள மாநில வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில், கூட்டு இயக்க நிர்வாகிகளுடன் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தலைமையில், மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையர் அருண்ராய், மாநில சமூகப் பாதுகாப்புத்திட்ட இணை ஆணையர் எம். லக்ஷ்மி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அப்பேச்சுவார்த்தையின்போது எந்தவித அரசாணையோ, உத்தரவோ அரசு வெளியிடாததால், போராட்டம் திட்டமிட்டபடி தொடரும் என கூட்டு இயக்க நிர்வாகிகள் அறிவித்ததோடு, அறிக்கையும் வெளியிட்டனர்.
இந்நிலையில், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அரசு செயலாளர் டாக்டர்.கே. மணிவாசன், 28.05.2018 மாலையில் புதிய அரசாணை(41)ஐ வெளியிட்டார். அந்த அரசாணையில், அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் நிரந்தர பணி செய்து ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டும் மாற்றுத்திறனாளிகளுக்கும், அதேபோல் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சுயதொழில் செய்து, 3 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் மாற்றுத்திறனாளிகளைத் தவிர மற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் சமூகப் பாதுகாப்புத்திட்டத்தின்கீழ் மாதாந்திர உதவித்தொகை ரூ.1000/- வழங்கப்படும் என்று அந்த உத்தரவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
உதவித்தொகை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு ஏடிஎம் கார்டு, புதிய படிவம் உள்ளிட்ட அரசு ஏற்கனவே அளித்திருந்த வாக்குறுதிகளை விரையில் தமிழக அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில், மே-29 முதல் மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் நடக்கவிருந்த தொடர் முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment