உத்தரகாண்ட் மாநிலம் நைநிடாலில் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலுக்கு கடந்த 22 ஆம் தேதி முஸ்லீம் இளைஞர் ஒருவர் வந்துள்ளார். கோயில் வளாகத்தின் ஒரு பகுதியில் தன் தோழி ஒருவரை பார்க்க வந்துள்ளார் அந்த முஸ்லீம் இளைஞர். பின்பு, இளைஞரும் அந்தப் பெண்ணும் வெகுநேரம் சிரித்தப்படி பேசிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று சில குறிப்பிட்ட அமைப்பினர் இவர்களை நோக்கி வந்துள்ளனர். இதனைக் கண்ட அந்தப் பெண், பேசுவதை நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதனையடுத்து அந்த இளைஞரை சூழந்த கும்பல் அவரை கடுமையான சொற்களால் திட்ட தொடங்கினர்.பின்பு, அந்த இளைஞரை தாக்கத் தொடங்கினர். இந்த சம்பவத்தை கண்ட அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டர் ககன்தீப் சிங் உடனடியாக இளைஞரை காப்பாற்ற தொடங்கினார். மேலும், இளைஞரை தாக்கிய கும்பலிடம் என்ன நடந்தது என கேட்டறிந்தார். அவர் கேட்டுக்கொண்டு இருக்கும்போதே கூட்டத்தினர் இளைஞரை தாக்கத் தொடங்கினர். இதனையடுத்து, அந்த இளைஞரை கட்டியணைத்து காப்பாற்றியப்படி, சப் - இன்ஸ்பெக்டர் ககன்தீப் சிங் பேடி இளைஞரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். சப்-இன்ஸ்பெக்டரின் இந்த நடவடிக்கையை பாராட்டி, இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோவும் புகைப்படமும் அதிகளவில் சமூக வளைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.
Comments
Post a Comment