லாப நோக்கில் பள்ளிகளை நடத்தினால் அங்கீகாரம் ரத்து என மாவட்ட கல்வி அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்ற பள்ளிகளை லாப நோக்கில் நடத்தினால் அங்கீகாரத்தை ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று மாவட்ட கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
கந்தர்வகோட்டை தாலுகா பகுதியில் உள்ள 14 அரசு அனுமதி பெற்ற மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் கணேஷ் அறிவுரையின்படி மாவட்ட கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பள்ளிகள் பெறவேண்டிய சான்றுகளான தாசில்தார் அனுமதி, கட்டிட உறுதி சான்று, சுகாதாரத்துறை சான்று, தீயணைப்புத்துறை சான்று மற்றும் அரசு அனுமதி உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் பள்ளியில் விளையாட்டு மைதானம், ஒரு வகுப்பில் இரண்டு கதவுகள், மாணவ, மாணவிகள் வந்து செல்ல வாகனங்கள், வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமம், பள்ளி கட்டண விவரம், போதுமான கட்டிடங்கள், கழிப்பறை வசதிகள் உள்ளனவா எனவும் ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப்பின் மாவட்ட கல்வி அலுவலர் கூறுகையில், லாப நோக்கத்தில் பள்ளிகளை நடத்த திட்டமிட்டால் பள்ளிக்கான அங்கீகார அனுமதியை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் என்றார்.
Comments
Post a Comment