திருச்சி அருகே, காவிரிக்கரையில், திருப்பராய்த்துறையில், 65 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதரவற்ற சிறுவர்களுக்கான ஒரு இல்லம் நடத்தப்பட்டு வருகிறது.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த இல்லத்தில், இரண்டு பள்ளிகளும், ஒரு தொழிற்பயிற்சி நிலையமும் (ITI ) நடத்தப்பட்டு வருகிறது…
திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண குடிலில் ஆதரவற்ற சிறுவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படுவது குறித்து குடிலின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்த ஆசிரமத்தில் ஓர் துவக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆசிரியர்கள் தங்க குடியிருப்புகள் உள்ளன. இங்கு 10- ஆம் வகுப்புத் தேர்வில் தொடர்ந்து 100 சதவிகிதம் தேர்ச்சி உள்ளது. இந்த மாணவர்கள் அரசு ஐ.டி.ஐ.யில் சேர்ந்து தொழிற்பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இங்கு சேர்க்கப்படும் மாணவர்களுக்கு உணவு, உடை, மருத்துவம் மற்றும் இருப்பிடம் இலவசமாக வழங்கப்படுகிறது.
அத்துடன் 10- ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 400 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை சென்னை மயிலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் கல்லூரியில் பாலிடெக்னிக் படிப்பில் சேர்த்து பொறியாளர்களாகவும் ஆக்கப்படுகின்றனர். மேலும், நடப்பாண்டு முதல் மாணவர்கள் மேல்நிலைக் கல்வியைத் தொடரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஓவியம், நாடகம், யோகா, கணினி பயிற்சி ஆகிய கலைகளில் திறமையை வெளிப்படுத்தவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. 8 ஆண்டுகளுக்கு முன் தாய், தந்தை இருவருமே இல்லாத சிறுவர்கள் மட்டுமே இங்கு சேர்க்கப்பட்டு வந்தனர். கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் தாயோ அல்லது தந்தையோ ஒருவர் மட்டும் இருந்து படிக்க வைக்க இயலாத ஆண் குழந்தைகளும் சேர்க்கப்படுகின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
இங்கு சேர விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: ஸ்ரீராமகிருஷ்ண குடில், திருப்பராய்த்துறை-639115. திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொலைபேசி: 0431- 2614235, 0431- 2614548 மற்றும் செல்லிடப் பேசி 9442352770 ஆகியவற்றில் கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடிலின் பள்ளிகளில் சேர்க்கப்படும் சிறுவர்களுக்கு, குடிலில் இருந்து ரூபாய் ஆயிரம் டெபாசிட் அவர்களுடைய எதிர்கால நலனுக்காக செய்து வைக்கப்படுகிறது. அவர்கள் படிப்பு முடிந்து குடிலை விட்டு வெளியே சொல்லும்போது, டெபாசிட்டின் கூடுதல் தொகையையும் சேர்த்து அன்பளிப்பாக வழங்கி அனுப்பி வைக்கப்படுவார்கள்

Comments
Post a Comment